தமிழகத்தில் அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி களம் காணும் நிலையில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் தனித்தனியாக போட்டியிடுகிறது. கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில், அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர்ந்து நீடிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

ஆனால் ராஜ்ய சபா சீட் விவகாரத்தில் அதிமுக மீது தே.மு.தி.க அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது தங்களுக்கு கண்டிப்பாக ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கூறிவந்த நிலையில் அதிமுக 2026 ஆம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு சீட் ஒதுக்கப்படும் என்று கூறியது.

இந்த முறை அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது தேமுதிகவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படும் நிலையில் சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தின் போது நடிகர் விஜயகாந்திற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை பிரேமலதா விஜயகாந்த் ஆதரித்த நிலையில் தற்போது கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு அவர் இன்று கலைஞர் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இதன் காரணமாக தேமுதிக திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை தற்போது தேமுதிகவுக்கு திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவர்களை வரவேற்பதற்கு நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.