
உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச்சில் சோகம் மிகுந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சமூக ஊடகங்களில் “உயர்தர ரீல்களை” உருவாக்க வேண்டுமென்ற ஆசையில், 14 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள், 19 வயதுடைய ஷதாப் என்பவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த ஷதாப் (19), தனது தாய்மாமாவின் திருமண நிகழ்வுக்காக, பஹ்ரைச்சில் உள்ள நாகௌர் என்ற தனது மூதாதையர் கிராமத்திற்கு சென்றிருந்தார். கடந்த ஜூன் 20ஆம் தேதி இரவு, “ரீல்ஸ்” செய்வதற்காக என்று கூறி, ஷதாப்வை, இருவர் ஒரு வெறிச்சோடிய பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் மீது தாக்குதல் நடத்தி, கழுத்தை கத்தியால் வெட்டி, பின்னர் செங்கலால் தலையில் அடித்து கொலை செய்துள்ளனர்.
கடந்த ஜூன் 21ஆம் தேதி காலை, ஷதாப் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. அதே நாளில், கிராமத்திலுள்ள கொய்யா தோட்டம் அருகே உள்ள ஒரு பாழடைந்த குழாய் கிணற்றில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது கழுத்து வெட்டப்பட்டு, தலையில் செங்கலால் தாக்கப்பட்டு, வெறிகொண்ட முறையில் கொலை செய்யப்பட்டிருந்தது.
போலீசாரின் விசாரணையில், ஜூன் 22ஆம் தேதி இரு சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், அவர்கள் சிறந்த குவாலிட்டி ரீல்களுக்காக ஐபோன் தேவைப்பட்டதால், கொலை செய்ய திட்டமிட்டதாகவும், நான்கு நாட்களாக இதற்கான திட்டம் வகுத்திருந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஐபோன், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் செங்கல் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த கொடூர சம்பவத்தில், பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் (பிரிவு 103(1) – கொலை, பிரிவு 238 – ஆதாரங்களை மறைத்தல்) 4 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இருவரும் சிறுவர்கள், மற்ற இருவர் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, குற்றஞ்சாட்டப்பட்ட இரு சிறுவர்களும் கோண்டா மாவட்ட சிறார் சீர்திருத்த இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு வயது வந்த குற்றவாளி தலைமறைவாக இருக்கும் நிலையில், அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒரு ஐபோனுக்காக இளைஞரை சிறுவர்கள் கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.