மெக்சிகோவிற்குப் புதிய வாகனங்களை கொண்டுசெல்லும் வகையில் பயணித்த ‘மார்னிங் மிடாஸ்’ எனப்படும் சரக்குக் கப்பல், தீப்பிழம்புகள், மோசமான வானிலை மற்றும் நீர் கசிவு போன்ற காரணங்களால் வடக்கு பசிபிக் பெருங்கடலில் முழுமையாக மூழ்கியதான தகவல் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

கப்பல் கடந்த ஜூன் 3ஆம் தேதி, அலாஸ்கா கடற்கரையிலிருந்து 300 மைல் தொலைவில் தீப்பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. அப்போது அதில் இருந்த 22 பேர் பாதுகாப்பாக உயிர்காக்கும் படகுகளில் வெளியேற்றப்பட்டு, அருகிலிருந்த வணிகக் கப்பல் மூலம் மீட்கப்பட்டனர். 600 அடி நீளமுள்ள இந்த கப்பல், மெக்சிகோவின் லாசரோ கார்டெனாஸ் துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

சீனாவின் யான்டாயிலிருந்து மே 26 ஆம் தேதி புறப்பட்ட இந்த கப்பல், மொத்தமாக 3,000 வாகனங்களை, அதில் மட்டும் 800 மின்சார வாகனங்களை மெக்சிகோவிற்கு எடுத்துச் சென்றது. தீப்பிழம்புகள் கட்டுக்குள் வராத நிலையில், அமெரிக்க கடலோர காவல்படையினர் மற்றும் விமானக் குழுக்கள் தீயை அணைக்க முயற்சித்தும், பயனளிக்காததால், கப்பலை பணியாளர்கள் கைவிட்டு விட்டு வெளியேறினர்.

கப்பல் முழுவதுமாக 16,404 அடி ஆழத்தில், அலூடியன் தீவுகளிலிருந்து 415 மைல் தொலைவில் மூழ்கியுள்ளது. தற்போதைக்கு காணக்கூடிய மாசுபாடு எதுவும் இல்லை என அமெரிக்க கடலோர காவல்படை செய்தியாளர் கேமரூன் ஸ்னெல் தெரிவித்தார். இருப்பினும் மாசுபாட்டை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளாக, மாசு கட்டுப்பாட்டு உபகரணங்கள், மீட்பு இழுவை கப்பல்கள் உள்ளிட்டவை தீவிர கண்காணிப்புடன் நெருக்கமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம், சர்வதேச கப்பல்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்களை மீண்டும் சுட்டிக்காட்டும் நிலையில் உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.