திருநெல்வேலி மாவட்டம் ஆலடி பட்டியைச் சேர்ந்தவர் சுடலை மணி(40). மாற்றுத்திறனாளியான சுடலை மணி திருச்செந்தூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக நியமிக்கப்பட்டார். முதல் நாளான நேற்று அவர் வேலைக்கு வந்தார்.

அப்போது திருச்செந்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் இருக்கும் பாதாள சாக்கடை குழாயில் கழிவுநீர் வெளியேறுவதாக தகவல் வந்தது. இதனால் ராட்சத லாரியுடன் தூய்மை பணியாளர்கள் அங்கு சென்றனர்.

அப்போதுதான் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. அதை சரி செய்வதற்காக சுடலை மணி முயன்ற போது எதிர்பாராதவிதமாக அவர் தொட்டியில் தவறி விழுந்து கழிவு நீரில் மூழ்கினார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கழிவு நேரில் மூழ்கிய சுடலைமணியை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். வேலைக்கு வந்த முதல் நாளே சுடலை மணி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.