தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அல்வால் என்ற பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி நடைபெற்ற ஒரு சம்பவம் குறித்த சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அன்றைய தினம் ஆஞ்சநேயலு (65) என்ற முதியவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று சாலையை கடக்க முயன்ற நிலையில் மிகவும் வேகமாக வந்தது. இதனால் அந்த முதியவர் மெதுவாக சொல்லும் படி அந்த வாகன ஓட்டியிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்ட உடன் அந்த வாகன ஓட்டி கோபப்பட்டு பைக்கை நிறுத்திவிட்டு கீழே இறங்கி வந்த அந்த முதியவரை தாக்க ஆரம்பித்தார். அந்த பைக்கில் அவருடன் அவர் மனைவி மற்றும் மகன் ஆகியோரும் வந்த நிலையில் முதியவரை அடிக்காமல் நிறுத்துமாறு மனைவி எவ்வளவோ தடுத்தார்.

ஆனால் அங்கு நின்றவர்கள் அதனை தடுக்காமல் சுற்றி நின்று வேடிக்கை மட்டுமே பார்த்தனர். இந்த சம்பவம் மனசாட்சியை உலுக்குவதாக அமைந்துள்ளது. அந்த வாகன ஓட்டி கண்மூடித்தனமாக வயதானவர் என்று கூட பாராமல் நடுரோட்டில் கொடூரமாக அடித்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அந்த முதியவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இது குறித்த சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகி மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த வாகன ஓட்டி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் தற்போது அந்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.