
கேரள மாநிலத்தில் சமீபத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் 4 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். இவர்கள் குளத்தில் குளித்ததால் மூளைக்காய்ச்சல் நோய் ஏற்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமலு தற்போது ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது மூளைக்காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மூளைக்காய்ச்சல் நோய் ஏற்பட்டவர்களுக்கு தலைவலி, வலிப்பு, பிரம்மை போன்ற சிந்தனைகள், மனக்குழப்பம், கடினமான கழுத்து வலி, வாந்தி, குமட்டல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள தேங்கி நிற்கும் அழுக்கு நீரில் குளிப்பதற்கு அனுமதிக்க கூடாது. அதன்பிறகு தேங்கி நிற்கும் குளங்கள், ஆறுகள் மற்றும் ஏரிகள் போன்றவைகள் சுத்தமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக நீச்சல் குளத்தில் சுகாதாரம் என்பது உறுதி செய்யப்பட வேண்டும். அதில் போதுமான குளோரினேசன் பராமரிக்க வேண்டும். மேலும் நீர்நிலைகளை சுத்தமாக வைத்திருப்பதுடன் அதில் பொதுமக்கள் நுழைவதை கட்டுப்படுத்தும் விதமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.