திமுக கட்சியின் எம்பி ஆ.ராசா உள்துறை மந்திரி அமித்ஷாவை முட்டாள் என விமர்சித்திருந்தார். அதாவது டெல்லி மற்றும் மகாராஷ்டிராவை போல் தமிழ்நாட்டையும் பிடிப்போம் என அமித்ஷா பேசியதை சுட்டிக்காட்டிய அவர் அவரை முட்டாள் என விமர்சித்தார். அதன் பிறகு ஸ்டாலின் ஒன்றும் தனி மனிதர் கிடையாது அவர் பின்னால் ஒரு திராவிட சித்தாந்தமே இருக்கிறது என்று கூறினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக நாராயணன் திருப்பதி ராசாவை இடியட் என்று விமர்சித்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் ஆ ராசாவுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,

கண்களுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்து, அம்பலப்பட்டு, சிறை சென்றுவந்த திமுக எம்பி திரு. ஆ. ராசா அவர்கள், நாட்டிற்காக நேர்மையாக உழைத்துக் கொண்டிருக்கும் நமது மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்களைத் தரக்குறைவாக விமர்சித்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்தில் பதவி வகிப்போருக்கு நாவடக்கம் தேவை, திரு. ஆ. ராசா அவர்களே! உங்கள் கட்சியின் ஆபாசப் பேச்சாளர்கள் போல கைத்தட்டல்களுக்காக எதையாவது உளறுவது ஆபத்தானது.

கடந்த சில தினங்களாக பயங்கரவாதிகளின் புகலிடமாகத் தமிழகம் மாறியதற்கு முழு முதற்காரணம் உங்கள் திராவிட மாடல் அரசு, சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னனைக் கட்சிப் பொறுப்பில் வைத்துத் தாலாட்டிக் கொண்டிருந்த அரசு உங்கள் விடியா அரசு, தமிழகத்தில் ஆயுதக் கலாச்சாரம் வேரூன்றி வளர்வதை வேடிக்கை பார்க்கும் அரசு உங்கள் விளம்பர மாடல் அரசு, கர்ப்பிணிப் பெண்ணைக் காவல் நிலையத்திலேயே வைத்துக் கொடூரத் தாக்குதல் நடத்திய அரசு உங்கள் கொடுங்கோல் அரசு. இப்படி பொதுமக்களின் பாதுகாப்பை முழுவதுமாக அடகுவைத்த நீங்கள், இந்தியா என்ற மாபெரும் ஜனநாயக நாட்டின் பாதுகாப்பை மொத்தமாகக் கட்டிக் காக்கும் நமது மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சரைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?

அதுசரி, திமுக ஆட்சியில் தமிழகத்தின் அவல நிலை குறித்து எதுவும் தெரியாமல், “நாம் தான் நம்பர் 1 முதல்வர்” என்ற மாய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் ஒருவரை தலைவராகக் கொண்ட மூடர் கூட்டத்திற்கு அனைவரும் முட்டாளாகத் தான் தெரிவார்கள், மஞ்சள் காமாலைக்காரர் கண்களுக்கு அத்தனையும் மஞ்சளாகத் தெரிவது போல. உங்கள் கீழ்த்தரமான ஆணவமிக்க அரசியல் நாகரிகமற்ற பேச்சுக்களுக்கு, தமிழக மக்கள் உங்களை 2026-க்குப் பிறகு அரசியலை விட்டே துரத்திவிடுவது உறுதி என்று பதிவிட்டுள்ளார்.