மதுரையில் இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் நேற்று நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் ஆந்திர துணை மந்திரி பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜு உள்பட பல பங்கேற்றனர். இந்த நிலையில் மாநாட்டில் ஒளிபரப்பான வீடியோ அதிமுகவினருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் அரசியல் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தலைவர்களை சிறுமைப்படுத்தும் நிகழ்வாக பயன்படுத்தியது தவறு. நாகரிகம் கருதி அதை எதிர்க்கவில்லை. ஆன்மீக விழாவில் அண்ணாவை விமர்சிக்கும் கருத்துக்கள் தேவையற்றது. “ஒரு நிகழ்ச்சியில் 99% நல்ல விஷயங்கள் நடைபெறும்போது, அதில் நடந்த ஒரு சிறு விஷயத்தை மட்டும் பெரிதுபடுத்தி, முழு நிகழ்வின் நன்மைகளை புறக்கணிப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.

அதிலும், அண்ணா போன்ற முன்னோடி தலைவரின் மீது விமர்சனங்கள் மேற்கொள்வது தேவையற்றது. அந்நேரத்தில் அவர் எடுத்த முடிவுகளை தற்போதைய சூழ்நிலையில் விமர்சிப்பது தவறு. மறைந்த தலைவர்களின் பங்களிப்புகளை மதித்து, அவர்களின் முற்போக்கான கொள்கைகளைப் பற்றியே பேச வேண்டிய காலகட்டத்தில், இவ்வாறு வீடியோ வெளியிடுவது அரசியல் நோக்கத்துடனான செயல் போன்றே தோன்றுகிறது” என தெரிவித்தார்.