கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு 17 வயது மாணவியை கல்லூரி மாணவர்கள் 7 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த 17 வயது மாணவிக்கு சமூக வலைதளம் மூலமாக சில கல்லூரி மாணவர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் நட்பாக மாறிய நிலையில் அவர்கள் குனியமுத்தூரில் உள்ள ஒரு அறைக்கு வருமாறு மாணவியை அழைக்க அதை நம்பி மாணவியும் அங்கு சென்றார். அப்போது 7 மாணவர்கள் சேர்ந்து அந்த மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அந்த சிறுமி நீண்ட நேரமாக வீட்டிற்கு வராததால் பதறிப்போன சிறுமியின் பாட்டி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.அந்த புகாரின் படி உக்கடம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சிறுமியை பத்திரமாக மீட்ட போலீசார் கல்லூரி மாணவர்கள் அனைவரையும் கைது செய்தனர். இந்த சம்பத்திற்கு  தற்போது எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,

கோவை அருகே 17 வயது சிறுமி 7 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சிறுமிகளுக்கே பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் மாறி வருவது மிகுந்த வேதனைக்குரியது. “குற்றம் நடந்த பின் கைது செய்துவிட்டோம்” என்று சொல்லும் முதல்வர், குற்றத்தை தடுக்க என்ன செய்தார் என்பதை ஏன் சொல்ல மறுக்கிறார்? தனக்கு தானே “அப்பா” என்று புகழாரம் சூட்டிக் கொள்பவருக்கு, இந்த மாணவி மகள் போன்றவர் இல்லையா? இவரின் பாதுகாப்பு பரிபோனதற்கு யார் பொறுப்பு?பெண்கள் பாதுகாப்பை முற்றிலுமாக துறந்துவிட்டு, விளம்பர மோகத்தில் இருக்கும் திரு. ஸ்டாலின் அரசுக்கு எனது கடும் கண்டனம். கோவை மாணவி பாலியல் வழக்கில் கைதானோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.