
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள குலிகுதுப் சாகி மைதானத்தில், முடி வளர்க்கும் எண்ணெய் முகாம் நடைபெறவிருக்கிறது என சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டு, வீடு வீடாக துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
இதைக் கண்டு ஆண்கள், பெண்கள் என சுமார் 6,000 பேர் அந்த முகாமுக்குத் திரண்டனர்.
மூலிகை எண்ணெய் தடவுவதற்கு அனைவரும் மொட்டை அடிக்க வேண்டும் என டெல்லியை சேர்ந்த கும்பல் தெரிவித்தது. அதன் பேரில், மக்கள் மொட்டை அடித்து, எண்ணெய்க்கும் பதிவு கட்டணமாக ரூ.700, எண்ணெய்க்காக ரூ.600 என தலா ரூ.1,300 செலுத்தியுள்ளனர்.
முகாமில், மக்களின் தலையில் மூலிகை எண்ணெய் என்று கூறி ஒரு வகை எண்ணெய் தடவப்பட்டது. அதை தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒருமுறை 3 மாதம் தடவினால், முடி அடர்த்தியாக வளரும் என உறுதியளித்தனர். அதனை பலரும் உண்மையாக நம்பி எண்ணெய் வாங்கிச் சென்றனர். இதன் மூலம், மொத்தமாக ரூ.78 லட்சம் வரை வசூலிக்கப்பட்டுள்ளது.
முகாமுக்கு வந்த அந்த டெல்லி கும்பல், சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் மக்கள் கூட்டத்தைச் சமாளித்த பின்னர், தங்களின் முகாமை மூடிவிட்டு விமானத்தில் ஹைதராபாத்திலிருந்து டெல்லிக்குத் தப்பி சென்றனர்.
இந்த மோசடியில் ஈடுபட்ட கும்பல், இதற்கு முன்னரும் உப்பலில் பொதுமக்களை ஏமாற்றியிருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது முடி வளர்ச்சி எதுவும் ஏற்படாமல் மக்கள் ஏமாற்றப்பட்ட நிலையில், இது ஒரு மோசடியாக மாறியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பல்லாயிரக்கணக்கான மக்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, ஹைதராபாத் போலீசார் அந்த டெல்லி கும்பலைத் தேடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இது போன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.