உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் முடி மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் டாக்டர் அனுஷ்கா திவாரியின் ஜாமீன் மனுவை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது. மாவட்ட நீதிபதி சவான் பிரகாஷ் தலைமையிலான நீதிமன்றம், அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மின்னணு மற்றும் வாய்மொழி ஆதாரங்களை ஏற்று இந்த தீர்ப்பை வழங்கியது.

கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி, ஃபரூக்காபாத்தை சேர்ந்த மயங்க் கட்டியாருக்கு முடி மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. மறுநாள் அவரது முகம் வீங்கி, கடும் வலியில் இருந்த நிலையில், தாயின் கைகளில் உயிரிழந்தார். இதேபோன்று மார்ச் 13-ஆம் தேதி, வினீத் துபே என்ற மற்றொரு பொறியாளருக்கும் அதே கிளினிக்கில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரும் அடுத்த நாள் உயிரிழந்தது, வழக்கை மேலும் தீவிரமாக்கியது.

விசாரணையின் போது, சிகிச்சை அளித்தது வேறொரு மருத்துவர் என டாக்டர் அனுஷ்கா திவாரி தெரிவித்திருந்தாலும், போலீசார் அவர்களின் மொபைல் லொகேஷன், மருத்துவ கிளினிக்கில் இருந்த மருந்து சீட்டுகள், சிகிச்சை பதிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவருக்கு எதிராக வலுவான ஆதாரங்களை சமர்ப்பித்தனர். சுமார் 200 நோயாளிகளுக்கான மருந்துச் சீட்டுகள், தவறான சிகிச்சை வழங்கியதற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கின் பின்னணியில், அரசு தரப்பில் செயல்பட்ட அரசு வழக்கறிஞர்கள் திலீப் அவஸ்தி மற்றும் ஓம்கார்நாத் வர்மா ஆகியோர், ஜாமீனுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இவ்விளக்கங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில், நீதிமன்றம் டாக்டர் அனுஷ்கா திவாரியின் ஜாமீன் மனுவை நிராகரித்து, அவரை தொடர்ந்து காவலில் வைத்தே விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. மேலும்  இதன் காரணமாக மருத்துவரிடம் விசாரணை நடத்தினால் இன்னும் பல உண்மை சம்பவங்கள் வெளிவரும் என்று கூறப்படுகிறது.