மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அரசியல் ஆதாயத்தை தேடுவதற்காக மக்களின் உணர்வுகளை திமுக தூண்டி விடுகிறது. முதலில் பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஒப்புக்கொண்டு விட்டு அதன் பின் கையெழுத்து போட மாட்டோம் என்கிறார்கள். தமிழக டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. தமிழகத்தில் மத்திய ஏஜென்சிகள் நடத்தும் வழக்குகளில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி தொகுதி மறு சீரமைப்பு குறித்து தெளிவுபடுத்துவிட்ட நிலையில் தற்போது புதிதாக இந்த பிரச்சனையை கிளப்பி விடுகிறார்கள்.

தொகுதி மறுசீரமைப்பு செய்தால் வடமாநிலங்கள் பலனடையும் என்றும் தென் மாநிலங்கள் பாதிக்கும் என்றும் கூறுகிறார்கள். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு செய்தால்  லடாக் போன்ற சிறு பகுதிகளில் எம்பிக்கள் இருக்க மாட்டார்கள். தொகுதி மறு சீரமைப்புக்கு முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு தொகுதி மறு சீரமைப்பு செய்வதற்கும் கால அவகாசம் எடுக்கும். மேலும் இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும் தான் அரசியல் ஆதாயத்திற்காக மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.

இந்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு கொரட்டூரில் உள்ள சிவலிங்கபுரத்தில் நடைபெற்ற அன்னம் தரும் அமுதகரங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, தமிழக முழுவதும் சோதனை நடத்தும் விசாரணை அமைப்புகள் எந்த ஊழலை கண்டுபிடித்தார்கள்? பாஜக அரசு செல்வதை அமலாக்கத்துறை அறிக்கையாக வெளியிடுகிறது. சட்ட மீறல், விதிமீறலின் ஒட்டுமொத்த உருவமாக விசாரணை அமைப்புகள் செயல்படுகிறது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும் பொய்களை நம்ப மக்கள் தயாராக இல்லை. முடிந்தால் அவரை தமிழ்நாடு நிதி அமைச்சருடன் வாதம் செய்ய சொல்லுங்கள் என சவால் விடுத்துள்ளார். மேலும் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடந்து கொள்கிறது. மும்மொழி கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி என மனசாட்சி இல்லாமல் கூறுகின்றனர் என அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.