
சென்னை மாவட்டம் தண்டையார்பேட்டை சேர்ந்தவர் அனுசுயா(30). இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது யாரோ காலிங் பெல்லை அழுத்தியுள்ளனர். வெளியே வந்து பார்த்தபோது முகமூடி அணிந்து நின்ற பெண் அனுசியாவின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி விட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்தார்.
அதற்குள் அனுசுயா தங்க சங்கிலியை இறுக்கமாக பிடித்துக் கொண்டு கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் அந்த பெண் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து அனுசியா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் தண்டையார்பேட்டையை சேர்ந்த அய்யம்மாள்(35) என்ற பெண் அனுசுயாவிடம் நகையை பறிக்க முயன்றது தெரியவந்தது. இவர் அனுசியாவின் பக்கத்து வீட்டில் தான் வசித்து வருகிறார். அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.