
ராஜஸ்தான் மாநிலத்தின் துங்கர்பூர் மாவட்டத்தில், ஆன்லைன் கேமில் அடிமையாகி பணத்தை இழந்த மருமகள் ஒருவர், வீட்டு பெட்டகத்தில் இருந்த 58 பவுன் தங்கத்தை திருடி விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டோவ்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹதாய் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், ஜூன் 19ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில், தனது மனைவி தாய் வீட்டிற்குச் சென்ற நிலையில், மகனும் மருமகளும் மட்டும் வீட்டில் இருந்ததாகவும், ஜூன் 18ஆம் தேதி தானும் மருத்துவக் காரணமாக துங்கர்பூர் சென்றிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அவரது இல்லத்திற்கு மறுநாள் திரும்பியபோது, வீட்டில் திருட்டு சம்பவம் நடந்தது தெரியவந்தது. வீட்டில் இருந்த பாதுகாப்பு பெட்டகம் உடைக்கப்பட்டு, 58 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது கண்டறியப்பட்டது. மருமகளும் மகனும் தங்கள் வீட்டில் திருட்டு நடந்துள்ளதாக போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் டோவ்டா காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கியது. இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் மருமகளை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது, மருமகள் திருட்டை ஒப்புக்கொண்டதோடு, ஆன்லைன் விளையாட்டுகளுக்காக தன்னை கட்டுப்படுத்த முடியாமல் பணத்தை இழந்ததற்காக இந்த திருட்டை செய்ததாகவும் கூறியுள்ளார். விளையாட்டுகளில் இழந்த பணத்தை ஈடுகட்டவே தனது வீட்டிலேயே உள்ள நகைகளை திருடியதாக கூறியுள்ளார். தற்போது போலீசார் அந்த பெண்ணிடம் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் ஆன்லைன் கேம்களின் மோசமான விளைவுகளை மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு முறை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.