தமிழக பாஜக கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை திமுகவினருக்கு கப்பம் கட்டினால் தான் தொழில் செய்ய முடியும் என பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்து ஒருவர் பேசிய வீடியோவினை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,

பல்லாவரம் பம்மல் அருகே, மாதம் ₹3 லட்சம் ரூபாய் மாமூல் கேட்டு, பம்மல் 5-வது வார்டு திமுக வட்ட செயலாளர் அனிஷ்டன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர், குவாரி உரிமையாளர், ஓட்டுநர் மற்றும் அவரது மனைவியை தாக்கியுள்ளனர். திமுகவினரின் தொடரும் இந்த அராஜகம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

 

கடந்த நான்கு வருடங்களில், ₹75 லட்சம் வரை, குவாரி உரிமையாளரிடமிருந்து இந்த திமுக வட்ட செயலாளர் வசூலித்திருப்பதாகத் தெரிகிறது. திமுகவினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் என்ற எழுதப்படாத விதி இருக்கிறது.

விசாரணை வளையத்தில் இருந்து ஊழல்வாதிகளைக் காப்பாற்ற, மக்கள் வரிப்பணத்தில் உச்சநீதிமன்றம் வரை செல்லும் முதலமைச்சர் திரு. ஸ்டாலின் தனது கட்சிக்காரர்களிடமிருந்து பொதுமக்களைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

அனைத்துத் துறைகளிலும் ஊழல், கனிம வளங்கள் கொள்ளை, திமுக குறுநில மன்னர்களின் கட்டாய வசூல், யாருக்குமே பாதுகாப்பில்லாத சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என, இருண்ட காலத்தில் தமிழகம் தள்ளாடுகிறது. ஆனால், இவை குறித்து எந்தக் கவலையும் இன்றி, கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு. ஸ்டாலின் என்று பதிவிட்டுள்ளார்.