திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கரிகாலன் பட்டி வீரபத்திரன் நகர் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி உமாதேவி (25) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு வயதில் மோனா ஸ்ரீ என்ற குழந்தை இருந்த நிலையில் திடீரென உமாதேவி தங்கள் வீட்டின் அருகில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தங்களுக்கு சொந்தமான ஒரு கிணற்றில் குழந்தையுடன் குதித்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு வயது குழந்தை மோனா ஸ்ரீயும் கர்ப்பிணி உமா தேவியும் பிணமாக மீட்கப்பட்டனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் உமாதேவியின் தந்தை ஏழுமலை தன்னுடைய மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் கூறிய நிலையில் பின்னர் போலீசார் அந்தப் பெண்ணின் கணவர் விக்னேஷ், மாமியார் சிவகாமி மற்றும் மாமனார் ஜெயவேலு ஆகியோரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது. அதாவது உமாதேவிக்கு ஸ்கேன் செய்யும் மையத்தில் வயிற்றில் இருக்கும் கரு ஆணா பெண்ணா என்பதை கண்டறிந்து சொல்லி உள்ளனர்.

ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் மீண்டும் அவரது வயிற்றில் இருப்பது ஒரு பெண் குழந்தை என கணவன் குடும்பத்தினருக்கு தெரிய வந்ததால் அவர்கள் அதனை கலைத்து விடும்படி கூறியுள்ளனர்.

அந்தப் பெண்ணை குடும்பத்தினர் தற்கொலைக்கு தூண்டியதால் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்த நிலையில் கணவன், மாமியார் மற்றும் மாமனார் ஆகியோவரை கைது செய்த போலீசார் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து சொன்ன ஸ்கேன் மையம் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை சொல்வதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் சட்டத்தை மீறி இப்படி ஒரு ஸ்கேன் மையம் நடந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கர்ப்பிணி பெண்ணும் குழந்தையும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.