
தமிழக மக்கள் மனதில் இருந்து அதிமுக மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, பொறாமையில் பொங்கியிருக்கிறார் ஸ்டாலின் திமுக தனது ஆட்சி அதிகாரத்தை பண பலத்தை பயன்படுத்தி ஜனநாயக படுகொலை செய்து இடைத்தேர்தலை சந்தித்ததால் தான் அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்தது. இன்றும் தமிழக மக்களோடு களத்தில் நிற்பது அதிமுக தான். மக்கள் நம்புவதும் அதிமுகவை மட்டும்தான். உண்மையில் தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆட்சி நமது மாநிலத்தை கற்காலத்துக்கே கொண்டு சென்று விட்டது.
மாநிலம் முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல், போதைப் பழக்கம் அதிகரிப்பு, ரவுடிகள் அராஜகம் என மோசமான நிலை நிலவுகிறது. தேர்தலில் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்ட திமுக மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். இதையெல்லாம் மறைப்பதற்கும் திசை திருப்பவும் அதிமுக குறித்து தொடர்ச்சியாக பேசி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். 2021 தேர்தலில் திமுக நூலிலையில் தான் வெற்றி பெற்றது என்பதை மறந்து விட வேண்டாம். மேலும் 2026 தேர்தலில் அதிக மெஜாரிட்டியுடன் நாங்கள் வெற்றி பெற்று கரைந்து கொண்டிருப்பது திமுக தான் என்பதை உங்களுக்கு புரிய வைப்போம் என்று பதிவிட்டுள்ளார்.