
சென்னை மாவட்டத்தில் உள்ள ஆதம்பாக்கம் இந்திரா நகரில் லோகேஷ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் நங்கநல்லூர் விஸ்வநாதபுரத்தில் இருக்கும் ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென இருக்கையை விட்டு எழுந்த லோகேஷ்வரன் எதிர் இருக்கையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த அருணாச்சலத்திடம் நீ ஏன் எனது மனைவியை முறைத்து பார்க்கிறாய்? என கேட்டார். இதனால் கோபமடைந்த அருணாச்சலம் கண் இருந்தால் பார்க்கத்தான் செய்வார்கள் எனக்கூறி லோகேஷ்வரன் மீது தண்ணீர் பாட்டிலை தூக்கி வீசியதாக தெரிகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது லோகேஸ்வரனின் நண்பர் பார்த்திபன் கத்தியால் அருணாச்சலத்தின் நண்பர் ஆல்பர்ட்டை கத்தியால் குத்தினார். இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் அருணாச்சலம் பார்த்திபனிடம் இருந்த கத்தியை பறித்து லோகேஷ்வரனின் தலை மற்றும் வலது முழங்கையில் குத்தியதால் அவருக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் காயமடைந்த ஆல்பர்ட் மற்றும் லோகேஷ்வரன் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இருதரப்பைச் சேர்ந்த ஐந்து பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.