
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், “தீவிரவாதம் எந்த உருவத்தில் வந்தாலும், அதை இரும்புக்கரமாக ஒடுக்க வேண்டும்.
அதேபோல், தமிழகத்திற்கு மத்திய அரசு பெரும் நிதியை வழங்கி வருகின்றது. ஆனால் அதை சிலர் போற்றி பேச மனம் வைக்கவில்லை. மத்திய அரசோடு மாநில அரசு இணைந்து செயல்பட்டால்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி சாத்தியம்” என்றார்.
தமிழக ஆளுநர் தன் பணியை நிதானமாக, சட்டப்படி செய்துவருகிறார் என்றும், அவருக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், டாஸ்மாக் பிரச்சனை விட, தற்போது கஞ்சா அதிகமாக பரவி வருகிறது. அதனை தடுக்கும் நடவடிக்கையை மாநில அரசு தீவிரமாக எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று குறிப்பிடுவது சரியான நிலைப்பாடு அல்ல என்று கூறிய அவர், “மத்திய அரசை ஒன்றிய அரசு என்றால், மாநில அரசு பஞ்சாயத்து அரசா? இது பிரிவினைவாத எண்ணத்தை ஊக்குவிக்கிறது. மொழிப்பெயர்ப்பு கூட இந்த எண்ணத்தில்தான் உருவாக்கப்படுகிறது” என்று கடுமையாக விமர்சித்தார்.
அதே நேரத்தில், “சமஸ்கிருதத்திலிருந்து தமிழ் வந்தது என்று கூறினால் நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோமல்லவா? அதுபோலவே நாம் பேசும்போது நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் மக்களுக்கான ஒழுக்கத்தைப் பேண வேண்டும்” எனும் கருத்தையும் அவர் தெரிவித்தார்.