
கிருஷ்ணகிரி அருகே ஒரப்பத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த திருமணத்தில், 21 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரத்திற்கு பின்னால் ஒரு கல்லூரி மாணவி, அவரது காதலன் உள்ளிட்ட நான்கு பேர் உள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
சேலத்தைச் சேர்ந்த மணமகனுக்கும், கிருஷ்ணகிரி பழையபேட்டையைச் சேர்ந்த மணமகளுக்கும் கடந்த திங்கள்கிழமை திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக இருவீட்டாரும் கடந்த 15 ஆம் தேதி இரவே திருமண மண்டபத்துக்கு வந்து தங்கியிருந்தனர்.
மணமகனின் உறவினரான கதிஜா (27) என்பவர் தனி அறையில் உறங்கியபோது, அவர் வைத்திருந்த கைப்பையில் இருந்த 21 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது மறுநாள் காலை தெரியவந்தது. புகாரின் பேரில் கந்திகுப்பம் போலீஸார் விசாரணையில் இறங்கினர்.
மண்டபத்தில் இருந்த CCTV காட்சிகள், மொபைல் பதிவுகள் என அனைத்தையும் சீராக ஆய்வு செய்த போலீசாருக்கு முக்கிய தகவல் கிடைத்தது. ஷீபா (19) என்ற கல்லூரி மாணவி, அந்நேரத்தில் மண்டபத்தில் இருந்து வெளியே செல்வதும், கைப்பேசியில் நீண்ட நேரம் பேசுவதும் பதிவாக இருந்தது.
அதன்பேரில் மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்த, அவர் சேலம் தனியார் கல்லூரியில் B.Sc., முதலாமாண்டு படிப்பவர் என்றும், சம்பவ நாளன்று தனது காதலன் கிஷோர் (19) என்பவருடன் சேர்ந்து நகைகளை திருடியதாக ஒப்புக்கொண்டார். மேலும், திருடிய நகைகளை கிஷோர் தனது தந்தை மகேந்திரன் (48) மற்றும் சக்திவேல் (42) ஆகியோரிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்தார்.
திருடிய நகைகள் சேலத்தில் உள்ள நகை கடைகளில் உருக்கி விற்க முயற்சி செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் ஷீபா, கிஷோர், மகேந்திரன் மற்றும் சக்திவேல் ஆகிய நால்வரையும் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த திருட்டுத் திட்டத்தில் தொடர்புடைய இன்னொரு நபர் தலைமறைவாக உள்ளதாகவும், அவரை பிடிக்க தீவிர சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். திருமண விழாவின் மகிழ்ச்சியான சூழலில் இவ்வாறு நகை திருட்டு நடந்து இருப்பது உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சி, கோபம் ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளது.