
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகேயுள்ள செம்புலிவரம் கிராமத்தைச் சேர்ந்த பவானி (35) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு மற்றும் நகை சீட்டுகளை நடத்தி வந்துள்ளார்.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பவானி மற்றும் அவரது கணவர் சங்கர் ஆகியோர் சேர்ந்து செம்புலிவரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நபர்களிடம் தொகுதியாக ரூ.78 லட்சத்திற்கும் மேற்பட்ட பணத்தை வசூலித்துள்ளனர்.
பணத்தை திருப்பித் தருவதாக கூறிய பவானி, அதன் பின்னர் உரிய நேரத்தில் தொகையை செலுத்தாததுடன், தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதனால் சீட்டு பணம் கட்டியவர்கள் ஆவடி மாநகர காவல் ஆணையரக குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மோசடி குற்றச்சாட்டு மற்றும் நம்பிக்கைக்கு எதிரான செயலுக்காக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
அதன்பேரில், விசாரணையில் ஈடுபட்ட போலீசார், பவானி சென்னை வேலப்பன்சாவடி பகுதியில் பதுங்கி இருப்பதை கண்டறிந்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரது கணவர் சங்கருக்கான தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.