மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவைக் கிண்டல் செய்த நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவின் செயல்கள் தற்போது அரசியல் பரபரப்பை உருவாக்கியுள்ளன. தனது நகைச்சுவை நிகழ்ச்சியில், ஷிண்டேவை “துரோகி” என சாடிய குணால் கம்ராவிற்கு எதிராக ஷிண்டே ஆதரவாளர்கள் கடுமையான எதிர்வினையை வெளியிட்டனர். இவரது மும்பை ஸ்டூடியோவை தாக்கி, உடைத்து சேதப்படுத்தினார்கள். அதன் பின்னர், மாநகராட்சி அதிகாரிகள் ஸ்டூடியோவை விதிமீறி கட்டப்பட்டுள்ளது என கூறி இடித்துத் தள்ளினர். இதற்கிடையில், குணால் கம்ரா மீது கொலை மிரட்டல், மற்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விசாரணைக்கு ஆஜராக காவல்துறையால் அழைக்கப்பட்ட குணால் கம்ரா, ஒரு வார அவகாசம் கேட்டிருந்தார். அவர் இதுகுறித்து, “நான் காவல்துறையுடன் ஒத்துழைக்க தயார், ஆனால் என் கருத்துக்கு வருத்தப்படவில்லை, மன்னிப்பும் கேட்கப்போவதில்லை” என உறுதியுடன் தெரிவித்திருந்தார். ஆனால் அவரது கோரிக்கையை மும்பை போலீசார் நிராகரித்து, உடனடியாக ஆஜராக வேண்டும் என்று அறிவித்தனர். இதற்கிடையில், தனது ஸ்டூடியோ மீது தாக்குதல் நடத்தும் வீடியோவை கிண்டலாக வெளியிட்டு, அதில் ஈடுபட்டவர்களை எஞ்சி மேலும் ஒரு நகைச்சுவை பாடலை குணால் வெளியிட்டுள்ளார்.

மத்திய மற்றும் மாநில பாஜக அரசுகளின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் குணால் கம்ரா தற்போது புதிதாக வெளியிட்டுள்ள நகைச்சுவை பாடல், முன்னாள் நடிகர் அனில் கபூர் நடித்த ‘மிஸ்டர் இந்தியா’ திரைப்படத்தில் இடம்பெற்ற “ஹவாய் ஹவாய்” பாடலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. “உங்கள் வரிப்பணம் வீணாக போகிறது” என்ற தலைப்பில் வெளியான இந்த பாடலில், “அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல், உடைந்த பாலங்கள், இது சர்வாதிகாரம்” எனும் வரிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த பாடலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் கடுமையாக விமர்சிக்கிறார் குணால் கம்ரா. “அவர் மக்களின் சம்பாத்தியத்தைக் கொள்ளையடிக்க, சம்பளத்தைத் திருட, நடுத்தர வர்க்கத்தை ஒடுக்க வந்திருக்கிறார். மக்களுக்கு சாப்பிட பாப்கார்ன் தர வந்திருக்கிறார். அவரை ‘நிர்மலா தாய்’ என்று அழைக்கிறார்கள்” என பரோடி வரிகளில் நக்கல் செய்துள்ளார். கடந்த ஆண்டு பாப்கார்ன் மீது விதிக்கப்பட்ட மூன்று விதமான வரி மற்றும் அதற்கான நிர்மலா சீதாராமனின் விளக்கங்கள் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது. பாஜக அரசு பெரிய நிறுவனங்களுக்கு சலுகை, ஆனால் பொதுமக்களுக்கு வரிச்சுமை என எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளையும் கம்ரா தனது கலை வழியாக எடுத்துக் கூறுகிறார்.