சென்னை திருவொற்றியூர் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் உள்ள வீட்டில், ரவுடி ஆகாஷ் என்பவர் அடையாளம் தெரியாத கும்பலால் கதவை உடைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட 17-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ஆகாஷ், சமீபத்தில் சிறையிலிருந்து வெளியே வந்திருந்தார். அவரது தாய் ஜெயா, ஆகாஷை வீட்டிற்குள் பூட்டி வைத்து பராமரித்து வந்தார்.

நேற்று இரவு வழக்கம் போல் ஜெயா வீட்டை பூட்டி வெளியே சென்றார். சாவியை குப்பைத்தொட்டியில் மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டிருந்தது, உள்ளே சென்று பார்த்தபோது ஆகாஷ் ரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் உயிரிழந்திருந்தார்.

தகவலறிந்த திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, ஆகாஷின் உடலை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான மேலதிக தகவல்களுக்காக போலீசார் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.