பெங்களூருவில் பசவனகுடி பகுதியில் கடந்த ஜூன் 15ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற 29 வயதான அக்ஷய் என்ற இளைஞர், மரக்கிளை விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார். இந்தச் சம்பவம், பிரம்மசைதன்யா கோயில் அருகே நிகழ்ந்தது. தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில், அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும், அறுவை சிகிச்சைக்கு பின்னும் 60 மணி நேரங்கள் ஆகியும் அவரது மூளை எந்தவித பதிலும் அளிக்காததால், மருத்துவர்கள் அக்ஷய்  மூளைச் சாவு அடைந்ததாக அறிவித்துள்ளனர்.

மருத்துவ ரீதியாக, அறுவை சிகிச்சைக்கு பிந்திய 48 மணி நேரத்துக்குள் மூளை செயற்படவில்லை என்றால், அது மூளைச் சாவாக கருதப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மருத்துவமனை தகவல்களை அக்ஷயின் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளது. குறிப்பாக அவரது தந்தை டயாலிசிஸ் சிகிச்சையில் இருப்பதால், அக்ஷய் தான் குடும்பத்தின் நிதிநிலையை கவனித்து வந்துள்ளார்.

 

சம்பவம் நடைபெற்றபோது, மரக்கிளை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அக்ஷய் மீது விழுந்தது. கட்டுப்பாட்டை இழந்த அவரது  வாகனம், அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரில் மோதியது. அக்ஷயுடன் பயணித்திருந்த அவரது நண்பர் பிரசாந்த் சாலையில் கீழே விழுந்ததில் சிறிது காயம் அடைந்தார். இருவரும் அருகிலிருந்தவர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அக்ஷ்ய் உயிரிழந்துவிட்டார். மேலும் இந்த சம்பவத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ள நிலையில் அவரது குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் நிவாரண உதவியும் அறிவித்துள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.