
தெலுங்கானா மாநிலத்தில் கரீம் நகர் என்ற மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் கடந்த ஜூன் 16ஆம் தேதி குமாரி என்ற கர்ப்பிணி பெண் தன்னுடைய கணவருடன் பத்ராசலம் செல்லும் பேருந்தில் ஏறுவதற்காக காத்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் அங்கு பணியில் இருந்த மாநில போக்குவரத்துக் கழக ஊழியர் உடனே ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தார். இருந்தாலும் ஆம்புலன்ஸ் வருவதற்குள் அந்த பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமானதால் அங்கிருந்த போக்குவரத்து கழக பெண் ஊழியர்கள் பேருந்து நிலையத்திலேயே அவருக்கு பிரசவம் பார்த்தனர்.
இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பிறகு தாயும் சேயும் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் நலமாக இருப்பதாக தெரிவித்தனர். இந்த நிலையில் கரீம் நகர் பேருந்து நிலையத்தில் பிறந்த பெண் குழந்தை தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மாநில அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்வதற்கு சிறப்பு பாஸ் வழங்கப்படும் என்று தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.