தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் வெளியூர் பேருந்துகள் தாம்பரம் வழியாக செல்ல வேண்டும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு சில பேருந்துகள், மதுரை வாயல் வழியாக செல்வதாக தாம்பரம், குரோம்பேட்டை, வடபழனி செல்லும் பயணிகள் தொடர்ந்து இது குறித்து போக்குவரத்து கழகத்திற்கு புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து, தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுவாக வெளியூர்களில் இருந்து சென்னை நோக்கி வரும் பேருந்துகள் தாம்பரம், கிண்டி வழியாக அல்லது பெருங்களத்தூர், மதுரவாயல் வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்கின்றன. போக்குவரத்து நெரிசலில் பேருந்துகள் சிக்கிக் கொள்வதை தவிர்க்க தாம்பரம் மார்க்கத்தை புறக்கணித்து மதுரவாயல் சாலை வழியாக பேருந்து ஓட்டுநர்கள் செல்கிறார்கள்.

இதனால் நேரம் மிச்சம் என்றாலும் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி, அசோக் பில்லர், வடபழனி பகுதிகளில் இறங்கி வேண்டிய பயணிகள் நேரடியாக கோயம்பேடு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அதன் பிறகு அவர்கள் இணைப்பு பேருந்து மூலமே தங்களுடைய பகுதிக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் பயணிகள் உடைய கூடுதல் பயண நேரம், தூரம் செலவு போன்ற சிக்கல்களை கருத்தில் கொண்டு காலை வேளையில் வெளியூர் பேருந்துகளை தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்து கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.