கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் என்ற பகுதியில் உள்ள சோழம்பட்டு கிராமத்தில் அருண் மருந்தகம் என்ற பெயரில் தனியார் மருந்தகம் ஒன்று அமைந்துள்ளது. அந்தக் கடையின் உரிமையாளர் சேட்டு என்பவர் டிபார்ம் முடித்துவிட்டு கடந்த 3 வருடமாக மருந்தகம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த மருந்தகத்தில் ஆண்மை சக்தி பெறுவதற்காகவும், குழந்தை பாக்கியம் பெறுவதற்காகவும் நாட்டு மருந்துகள் கிடைக்கும் என போர்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த மருந்தகத்தில் பெண்களுக்கு சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் ஒன்று வெளியானது.

அந்தத் தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் உட்பட பலர் மருந்தகத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கருக்கலைப்பு செய்யப்படுவதற்கான உபகரணங்கள் இருந்தது. எனவே அந்த மருந்தகத்தில் கருக்கலைப்பு செய்யப்பட்டதை போலீசார் உறுதி செய்தனர். மேலும் மருந்தகத்திற்கு செல்லும் பெண்கள் மற்றும் ஆண்களிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது அங்கு சென்ற ஒரு தம்பதியினரிடய் போலீசார் விசாரணை நடத்திய போது கரு கலைப்பு செய்வதற்காக வந்ததாக கூறினர். எனவே இந்த சம்பவம் தொடர்பாக மருந்தகத்தின் உரிமையாளரான சேட்டு என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பின்பு‌கைது செய்த அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தியதில் இவருக்கு உதவியாக 3 பேர் வேலை செய்தது தெரியவந்தது. எனவே அவர்களையும் போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட கடையின் உரிமையாளர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடையின் உரிமையாளரான சேட்டு என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதபோது, மருந்தகத்திற்கு வரும் கர்ப்பிணி பெண்களிடம் வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என தெரிந்து கொள்வதற்காக ரூபாய் 15,000 வசூல் செய்தது தெரிய வந்தது.

மேலும் வயிற்றில் பெண் குழந்தையாக இருந்தால் அதற்கு கருக்கலைப்பு செய்ய ரூபாய் ஒரு லட்சம் வரை வசூல் செய்வதாக ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.