கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் குமார் (35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வரி (33) என்ற பெண்ணுடன் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் 4 குழந்தைகள் இருக்கிறார்கள்.

கடந்த மார்ச் மாதம் பெண் குழந்தைகளுக்கு தந்தை குமார் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மகேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கிட்டத்தட்ட 110 நாட்களாக சிறையில் இருந்த குமார் நேற்று ஜாமீனில் வெளியே வந்தார்.

இதைத்தொடர்ந்து தன்னுடைய மனைவியை பார்ப்பதற்காக திருப்பூர் முதலிபாளையம் பகுதிக்கு குமார் சென்றார். அங்கு தன்னுடைய மனைவியிடம் தான் செய்தது தவறு எனவும் இனி நாம் சேர்ந்து வாழலாம் எனவும் குமார் கூறினார். ஆனால் அவரது மனைவி அதனை ஏற்க மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த குமார் அரிவாள் மனையை எடுத்து தன்னுடைய மனைவியின் கழுத்தை வெட்டிவிட்டார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் வீட்டிற்கு வந்தனர். அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு மகேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து குமார் தானாகவே சென்று போலீசில் சரணடைந்தார். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.