
குஜராத் மாநிலம் நாடியாத் அருகே உள்ள உத்தரசந்தா கிராமத்தில், 18 வயது இளைஞர் கிரிஷ் பர்மரின் மரணம் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 26ஆம் தேதி ஆனந்த் நகரத்துக்கு கல்லூரி சேர்க்கைக்காக சென்ற கிரிஷ், மாலையில் வீட்டிற்கு திரும்பும் வழியில், அவரின் பைக் ஒரு டிராக்டர் டிராலியில் மோதியது. இந்த விபத்தில் அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு, 12 நாட்கள் தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கிரிஷ், சஞ்சய்பாய் பர்மரின் ஒரே மகனாவார். சமீபத்தில் 12ஆம் வகுப்பு தேர்வை முடித்த அவர், பிசிஏ படிக்கத் தயாராகி இருந்தார். பைக்கை மிகவும் நேசித்த அவர், எப்போதும் கார் இருந்தாலும் கூட பைக்கில்தான் பயணம் செய்ய விரும்புவதாக அவரது பெற்றோர் கூறுகிறார்கள். அவருடைய இந்த பைக் பற்றிய பாசத்தை உணர்ந்த குடும்பத்தினர், அவரது இறுதி சடங்கில் அதையும் சேர்த்து புதைத்தனர்.
கிரிஷின் அப்பா சஞ்சய்பாய் பர்மர் கூறும்போது, “அவர் பைக் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதனால்தான் அவருக்கு பிடித்த பைக்கை கூட அவரோடவே புதைத்தோம். அவருடைய விருப்பங்களை மரணத்திலும் மதிக்கலாம்னு நாங்கள் முடிவு செய்தோம்” எனக் கூறினார். இறுதிச்சடங்கில் கிரிஷின் உடையுடன் அவரது கண்ணாடி, காலணி, ஆடைகள் மற்றும் அவரது பைக்கும் கல்லறையில் வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களையும் உறவினர்களையும் கலங்க வைத்தது.
இந்த நிகழ்வு கிராம மக்கள் மத்தியில் பெரும் மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கிரிஷின் பைக்குடன் கல்லறையில் வைக்கப்பட்ட அந்த காணொளி சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகின்றது. இளம் பருவத்திலேயே மரணம் அடைந்த கிரிஷின் இழப்பும், அவரின் பைக்குடன் அவரைச் சேர்த்த நெகிழ்ச்சியான முடிவும் பலரது இதயத்தையும் தொட்டுள்ளது.