
திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில், புதுமண தம்பதிகளின் வாழ்கையை இருளாக்கும் வகையில், மனைவி தனது கணவரை விஷம் கொடுத்து கொன்ற கொடூரச் சம்பவம் ஜார்க்கண்டின் கர்வா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
கர்வா மாவட்டத்தில் உள்ள பஹோகுந்தர் கிராமத்தைச் சேர்ந்த புத்நாத் சிங், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சுனிதா தேவியை கடந்த மே 11, 2025 அன்று திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு சில நாட்களிலேயே சுனிதா தனது கணவருடன் வாழ விருப்பமில்லை எனக் கூறி, தனது தாய் வீட்டிற்குச் சென்று விட்டார்.
இருவீட்டாரின் முயற்சியிலும், ஜூன் 15ஆம் தேதி மட்டுமே சுனிதா மீண்டும் புத்நாத்துடன் அவரது வீட்டிற்குச் சென்றார். மணவாழ்க்கை மீண்டும் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பில் இருந்த புத்நாத்திடம், அவரது மனைவி தாவரங்களுக்கு அடிக்க பூச்சிக்கொல்லி மருந்து வாங்கி வருமாறு கூறியுள்ளார்.
அதன் படி மருந்து வாங்கியதும், அதுவே அவரது இறப்பிற்கு வழிவகுத்தது என்பது தான் கடுமையான வருத்தம். ஜூன் 15ஆம் தேதி இரவு உணவில் அந்த விஷம் கலந்து கொடுக்கப்பட்டது. மறுநாள் காலை, புத்நாத்தின் தாய் தனது மகனை எழுப்ப சென்றபோது, அவர் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே கிராம மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சுனிதாவை பிணைக் கைதியாக அழைத்துச் சென்று ரங்கா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து, போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில், போலீசார் சுனிதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம், விஷம் கலந்து கொடுத்தது ஏன்? அதற்கான பின்னணி என்ன? என பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.