கேரள உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் அரசு அளித்த விளக்கம் தற்போது கவனத்தை ஈர்த்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பேசப்படுகிறது. அதாவது பில்லி சூனியம் மாய மந்திரம் போன்றவற்றை தடை செய்யும் சிறப்பு சட்டத்தை உருவாக்கும் முன்மொழிவை கேரள அரசு கைவிட்டதாக கூறப்படும் நிலையில் இது தொடர்பாக எந்த ஒரு சிறப்பு சட்டத்தையும் இயற்றவில்லை என உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதாவது பில்லி சூனியத்தை தடை செய்யும் விதமாக அரசாங்கம் புதிய சிறப்பு சட்டத்தை உருவாக்குகிறதா? இல்லையா என்று ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக புதிய சட்டத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டதாகவும் ஆனால் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அந்த சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டாம் என முடிவு செய்ததாகவும் அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இது ஒரு அரசாங்கத்தின் கொள்கை முடிவு என்பதால் நீதிமன்றம் ஒரு மனு மூலமாக இந்த சட்டத்தை இயற்ற வேண்டும் என்று மாநில அரசுக்கு உத்தரவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளனர். இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையிலும் இந்த நடைமுறைகளை தடுக்க சட்டம் தவிர வேறு ஏதாவது நடவடிக்கை எடுக்க முடியுமா என்று கேட்டது. மேலும் இது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என கேரளா அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.