ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா பகுதியில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக கூறப்படுவதால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்த முறை இந்தியா கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதன்படி பாகிஸ்தானியர்களுக்கான விசாவை ரத்து செய்த மத்திய அரசு உடனடியாக அவர்களை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளதோடு சிந்து நதி நீரையும் நிறுத்திவிட்டது. இதேபோன்று தற்போது ஷெனாப் நதி நீரையும் இந்தியா நிறுத்தியதோடு காஷ்மீரில் உள்ள மற்றொரு நதிநீரையும் பாகிஸ்தானுக்கு செல்ல விடாமல் நிறுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி இரு நாட்டுப்படைகளும் எல்லையில் வீரர்களை குவித்து வைத்துள்ளதால் போர் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த எம்பி அப்சல்கான் பர்வட் என்பவர் இந்த சம்பவம் குறித்து பேசி உள்ளார். அதாவது இந்தியாவுடன் போர் நடந்தால் துப்பாக்கியுடன் எல்லைக்கு செல்வீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் நான் போர் நடந்தாலும் இங்கிலாந்துக்கு சென்று விடுவேன் என்றார். அதன்பிறகு பதற்றத்தை தணிக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி தற்போதைய நிலையிலிருந்து பின்வாங்குவாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் அதற்கு அவர் நான் சொல்வதைக் கேட்டு பின்வாங்க மோடி என்ன என்னுடைய அத்தை மகனா என்று கூறினார்.