
ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள ஷேக் பிகாரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு பெண் நோயாளி சிகிச்சை பெற முடியாமல் தற்காலிகமாக நிராகரிக்கப்பட்டது மக்களிடையே கடும் வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு 1 மணியளவில், பர்கத்தா பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பம் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தது. ஆனால் மருத்துவமனை கதவு பூட்டியிருந்ததாலும், உள்ளே உள்ள சுகாதார ஊழியர்கள் உதவ முன்வராததாலும், அவர்கள் வேறு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
குடும்பத்தினர் கதவை தொடர்ந்து 1 மணி நேரம் தட்டியும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் யாரும் உதவ முன்வரவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து முயற்சி செய்தபின், தாங்கள் ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று குழந்தையை பாதுகாப்பாக பெற்றெடுத்ததாக பாதிக்கப்பட்ட குடும்பம் தெரிவித்துள்ளது. அந்தப் பெண்ணின் ஹீமோகுளோபின் குறைவாக இருந்ததால், அவர்கள் முன்னதாக பார்ஹி துணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக பரிந்துரை பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
மருத்துவமனை நிர்வாகம் மீது பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில், மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் டாக்டர் அனுகரன் பூரி, மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவம் மாநில சுகாதார அமைப்பின் செயல்முறைகளில் குறைபாடுகள் இருப்பதை வெளிப்படுத்துவதாகவும், அவற்றை விரைவில் சரி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து ஹசாரிபாக் நாடாளுமன்ற உறுப்பினர் மணீஷ் ஜெய்ஸ்வால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது “மருத்துவமனையின் அலட்சியமான செயல் மனிதகுலத்தின் மீது அவமானம் எனும் முத்திரையை பதிக்கிறது. ஒரு மணி நேரமாக கதவைத் தட்டியும், அந்த வார்டின் கதவுகள் திறக்கப்படாதது வருத்தமளிக்கிறது” என எம்.பி. தெரிவித்தார். மேலும் குழந்தையும் தாயும் தற்போது நலமாக இருப்பது தான் இந்த சம்பவத்தில் உள்ள ஒரே ஆறுதல் என்றும் கூறினார்.