ஆந்திர மாநிலத்தில் உள்ள நந்தியாலா மாவட்டத்தில் செஞ்சி குடே பகுதி உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கடந்த 21ஆம் தேதி பிரசவ வலி வந்தது. உடனடியாக உறவினர்கள் கொத்த பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெண்ணை அழைத்து சென்றனர். ஆனால் அங்கிருந்த அரசு ஊழியர்கள் கர்ப்பிணி பெண்ணை அனுமதிக்க மறுத்து ஆத்மகூர் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறிவிட்டனர். ஆனால் அந்த பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமாக இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்குமாறு உறவினர்கள் கெஞ்சி கேட்டனர். ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மனிதாபிமான மற்ற முறையில் நடந்து கொண்ட நிலையில் படிக்கட்டு வழியாக கர்ப்பிணி பெண்ணை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உறவினர்கள் கீழே இறங்கி வந்தனர்.

அப்போது ஆஸ்பத்திரி படிக்கட்டில் பெண்ணுக்கு  குழந்தை பிறந்தது. இதனை பெண்ணின் உறவினர்கள் வீடியோவாக பதிவு செய்த நிலையில் பின்னர் கர்ப்பிணி பெண்ணையும் குழந்தையையும் வீட்டிற்கு அழைத்து சென்றனர். இந்த தொடர்பான போட்டோ சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் தங்களுக்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் குழந்தை பிறந்த பெண்ணின் வீட்டிற்கு 3 நாட்களுக்குப் பின் சென்றனர். அவர்களை சமாதானம் செய்து மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.