தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். இன்று காலை பேரவை மண்டபத்திற்கு வருகை தந்த ஆளுநரை தலைவர் அப்பாவு வரவேற்றார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். தமிழ் தாய் வாழ்த்து இசைக்க பட்டவுடன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்பதால் ஆளுநர் வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூறியதாவது அரசமைப்பு விதி 176(1) படி ஆளுநர் உரை வாசிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

ஆளுநர் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி இருக்க வேண்டும். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஆளுநர் இப்படி செய்து இருக்கிறார். அவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தோம். இதுவரை எந்த ஆளுநரும் இப்படி செய்ததில்லை.கடந்த 1995-இல் ஆளுநர் சென்னா ரெட்டி ஆளுநர் உரையை வாசிக்காத போது அவரை திரும்ப பெற வேண்டும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார். புதிய ஆளுநரை நியமிக்கும் போது அரசிடம் பரிந்துரை கேட்க வேண்டும் என தெரிவித்தார். அதன் பிறகு 1996-ஆம் ஆண்டு ஆளுநர் உரை நடந்தது.

சட்டப்பேரவையின் மரபுப்படி தமிழக கலாச்சாரப்படி முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படும். நிகழ்ச்சி நிறைவு பெறும்போது தேசிய கீதம் ஒலிக்கப்படும். தமிழ்நாட்டில் அனைத்து நிகழ்ச்சிகளும் இப்படித்தான் நடக்கிறது. தமிழ்நாட்டு மரபுகளை மாற்ற முடியாது. ஆளுநர் வரும்போது தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்றால் என்ன செய்வது? தெலுங்கானாவில் ஒரு முறை ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு அழைப்பு விடுக்கவில்லை. அவரும் வரவில்லை. அங்கு சட்டப்பேரவை நடக்கவில்லையா? இதே ஆளுநர் இருந்தால் அடுத்த ஆண்டும் இதே மாதிரி தான் நடைபெறும் என கூறியுள்ளார். மேலும் ஆளுநர் அவையை அவமதிப்பது நாடாளுமன்றத்திலோ? பாஜக ஆளும் மாநிலங்களிலோ இப்படி ஏதாவது நடந்திருக்கிறதா? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.