
சென்னையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசு மும்மொழி கொள்கையை ஏற்குமாறு கூறுவதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது, இந்த ஆர்ப்பாட்டம் திமிர் பிடித்தவர்களுக்கு எதிராக நடைபெறுகிறது. நாம் கொடுத்த வரியை திருப்பி கேட்டால் மத்திய அமைச்சர் இது அற்பத்தனம் என்கிறார். தர்மேந்திரா என பெயர் வைத்துள்ள மத்திய அமைச்சர் எந்தவித தர்மமும் இல்லாதவர். அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு நிதி தர முடியாது என்று ஆணவத்துடன் கூறுகிறார். இது என்ன உங்க அப்பன் வீட்டு பணமா.? நாங்கள் எங்கள் உரிமையை தான் கேட்கிறோமே தவிர யாசகம் கேட்கவில்லை. எந்த அரசியலமைப்பு சட்டத்தில் மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதி தரக்கூடாது என்று இருக்கிறது.
அப்போதைய பிரதமர் நேரு ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தியை திணிக்க கூடாது என்று கூறிய நிலையில் இப்போதைய பிரதமர் மோடி மன்னர் போல் செயல்படுகிறார். அவருடைய பாசிச ஆட்சியை எதிர்த்து தான் இங்கு போராட்டம் நடைபெறுகிறது. தன் வீட்டின் முன்பாக தன்னைத்தானே அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டார். அப்படிப்பட்டவர் இருமொழிக் கொள்கை காலாவதியாகிவிட்டது என்கிறார். உண்மையாகவே அண்ணாமலை தான் தற்போது காலாவதியாகிவிட்டார். தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை பாஜகவை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் எதிர்க்கிறார்கள். மேலும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு மக்களிடம் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.