
பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்தியா குறித்து அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடும் ஒருவருமான ஷாஹித் அப்ரிடி, இறந்துவிட்டதாக ஒரு வீடியோ இணையத்தில் பரவி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அவர் கராச்சியில் கொலை செய்யப்பட்டு, அங்குள்ள ஒரு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பலர் இரங்கல் செய்திகளையும், புகழஞ்சலிகளையும் இணையத்தில் பகிரத் தொடங்கினர்.
இச்செய்தி உண்மையா என பலரும் சந்தேகத்தில் இருந்த நிலையில், சில செய்தி நிறுவனங்களும் இந்த செய்தியை ஒளிபரப்பியதுடன், அவரது உடல் கராச்சியில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளனர். இதன் பின்னணியில், சில நபர்கள் நேரடியாக ஷாஹித் அஃபிரிதியிடம் தொடர்பு கொண்டனர். அதன்பேரில், அவர் முழுமையாக நலமாக இருப்பதும், எந்தவிதமான பிரச்சனையும் இல்லாததும் உறுதி செய்யப்பட்டது.
பின்னர் விசாரணை நடத்தியதில், இந்த வீடியோ உண்மையல்ல என்பது தெரியவந்தது. முழுவதுமாக செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என தெரியவந்தது. இதனைக் கண்ட பிறகு பலரும் அதிர்ச்சி அடைந்த நிலையில், தற்போது அது பொய்யான வீடியோ என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சமூக ஊடகங்களில் போலித் தகவல்களை பரப்பும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுவதால், மக்கள் எதையும் பகிர்வதற்கு முன் சரிபார்க்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
View this post on Instagram