
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாநிலம், வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 28) நடந்த கொடூரமான தாக்குதலில், வெடிபொருட்கள் நிரப்பிய வாகனத்தை தற்கொலைபடை தீவிரவாதி பாகிஸ்தான் ராணுவ வாகனத் தொடரணியின் மீது மோதியதால் 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் மேலும் 10 ராணுவ வீரர்கள் மற்றும் 19 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்குப் பின்னால் எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
இந்த தாக்குதல், தெற்கு வஜிரிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கையில் (IBO) இருவரை இழந்து 11 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றதற்குப் பிறகு நடைபெற்றுள்ளது.
Statement regarding Pakistan
🔗 : https://t.co/oQyfQiDYpr pic.twitter.com/cZkiqY1ePu
— Randhir Jaiswal (@MEAIndia) June 28, 2025
“>
பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடக பிரிவு ISPR வெளியிட்ட அறிக்கையில், இந்த தாக்குதல் திட்டமிட்ட பயங்கரவாத நடவடிக்கையாகவும், நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பை குலைக்கும் நிகழ்வாகவும் வர்ணிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், இந்தியாவே இந்த தாக்குதலுக்குப் பின்னால் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், இதை இந்திய வெளியுறவுத்துறை கடுமையாக நிராகரித்துள்ளது.
“இந்தியாவைக் குற்றம் சாட்டும் பாகிஸ்தான் ராணுவத்தின் அறிக்கையை தகுதியான அவமதிப்புடன் நிராகரிக்கிறோம்,” என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
AFP செய்தி நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2021-ல் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தானில் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து பயங்கரவாத தாக்குதல்களில் 290க்கும் மேற்பட்டோர், பெரும்பாலும் பாதுகாப்பு அதிகாரிகள், கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், வஜிரிஸ்தானில் நடந்த தற்போதைய தற்கொலை தாக்குதல், பாகிஸ்தானின் உள்நாட்டு நிலைமையை மேலும் சிக்கலாக்கும் வகையில் அமைந்துள்ளது.