
திமுகவில் 5 வருடங்களுக்கு ஒரு முறை உள்கட்சி தேர்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் திமுக உள்கட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானாலும் 2022 ஆம் ஆண்டு தான் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது தலைவராக முதல்வர் ஸ்டாலினும், பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர் பாலுவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகள் அதிகாரமிக்க பதவியாகும். திமுக தலைமை வெளியிடும் அனைத்து அறிவிப்புகளும் பொதுச் செயலாளர் தலைமையில் தான் வெளியாகும். கருணாநிதி திமுக தலைவர் ஆக இருந்தபோது பொதுச் செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகன் மற்றும் பொருளாளராக இருந்த ஆற்காடு வீராசாமி ஆகியோர் அவருக்கு பக்கபலமாக இருந்தனர்.
கருணாநிதி மறைவுக்கு பிறகு தலைவராக பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலின் மூத்த தலைவர் என்ற பெயரில் துரைமுருகனை பொதுச் செயலாளராக நியமித்தார். முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கிய அதிகாரம் இருக்கும் நிலையில் இளைஞர் அணி செயலாளராகவும் அவர் இருக்கிறார்.
அண்ணா அறிவாலயத்தில் தற்போது நடைபெறும் ஏதாவது முக்கியமான ஆலோசனைகளுக்கு மட்டுமே துரைமுருகன் வரும் நிலையில், சமீபத்தில் அவரிடம் இருந்த கனிம வளத்துறை அமைச்சர் ரகுபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிலும் அவர் இடம்பெறாத நிலையில் இதில் அவருக்கு மன வருத்தம் இருப்பதாக கட்சியினர் பேசுகிறார்கள்.
இந்நிலையில் தற்போது துரைமுருகனை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து மாற்றுவதற்கு முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அவருக்கு பதிலாக பொருளாளராக இருக்கும் டி.ஆர் பாலுவை பொதுச் செயலாளர் நியமித்துவிட்டு, பொருளாளர் பதவியை அமைச்சர் எ.வ. வேலுவிடம் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. மேலும் இதுகுறித்து அதிகாரப்பூர் அறிவிப்புகள் வந்தால் தான் உண்மை என்னவென தெரியவரும்.