திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேயுள்ள அருணாச்சலபுரம் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் என்பவரது 11 வயது மகன் முனீஸ்வரன், வத்தலகுண்டில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்குச் சென்ற மாணவன், பள்ளி அருகே கழுத்தில் இரத்தம் வடிந்த நிலையில் நடந்து செல்வதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். அவரிடம் விசாரணை நடத்திய போது, முகமூடி அணிந்த இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கழுத்தில் கத்தியால் வெட்டி தப்பியோடிவிட்டதாக கூறியுள்ளார்.

தகவல் அறிந்த பொதுமக்கள் உடனே மாணவனை மீட்டு வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மாணவனின் குடும்பத்தினரும், வத்தலகுண்டு காவல்துறையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மாணவன் கூறிய தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவம் நடந்த இடத்தை சிசிடிவி கேமராக்கள் மூலம் ஆய்வு செய்தனர். அதில் மாணவனின் கூறும் உரையாடல் மற்றும் தாக்குதல் சம்பவம் எதுவும் பதிவாகவில்லை.

அதனைத் தொடர்ந்து மாணவனிடம் மேலும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டபோது உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அறிவியல் பாடப்பருவம் எழுதவில்லை என்பதனால், ஆசிரியர் கண்டிப்பார் என அஞ்சிய மாணவன், அதிலிருந்து தப்பிக்க தானாகவே பிளேட் மூலம் கழுத்தில் வெட்டிக்கொண்டு, ‘தாக்கப்பட்டேன்’ என நாடகம் ஆடியதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தரப்பிலான விழிப்புணர்வின் தேவை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. குழந்தைகள் மன நிலையில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து, தவறுகளை ஒப்புக்கொள்ளும் மனநிலையை வளர்க்கும் வகையில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.