
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் இன்று அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி காலை 11.50 மணியளவில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்டது. நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் வெளியே ஓடி வந்து தஞ்சம் புகுந்தனர். இதனையடுத்து, 6.4 ரிக்டர் அளவில் மற்றொரு பூகம்பமும் ஏற்பட்டது. அதன் பிறகும் 3 முறை நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
பூகம்பத்தின் மையம் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட சாகிங் பகுதியில் உள்ளதாகவும், அந்த பகுதியில் பாதிப்பு மிக மோசமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. மியான்மருக்கு அண்டைய நாடான தாய்லாந்திலும் இந்த நிலநடுக்கத்தால் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் பாங்காக்கில் உள்ள உயரமான அடுக்குமாடி கட்டிடங்கள் பல அதிர்ந்தன, சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இந்த நிலையில் மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 55 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 200 பேர் காயமடைந்துள்ளனர். தாய்லாந்தில் 4 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 81 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.