திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு அருகே கரிப்பூர் பகுதியில் அமைந்துள்ள முகவூர் மகாவிஷ்ணு கோயில் குளத்தில் மூளையை பாதிக்கும் வகையிலான அபாயகரமான அமீபா நுண்ணுயிரிகள் இருப்பது கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குளத்தில் குளித்த மூன்று சிறுமிகள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பரிசோதனை நடத்தப்பட்டதில், மூளையை தாக்கும் “அமீபிக் மெனிங்கோசெபாலிடிஸ்” எனப்படும் அபாயகர நுண்ணுயிரிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உறுதியாகியுள்ளது.

100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த கோயில் குளம், வருடத்தில் ஒருமுறை திருவிழா நேரத்தில்தான் சுத்தம் செய்யப்படுவதாக  பொதுமக்கள் குற்றச்சாட்டாக தெரிவித்துள்ளனர். நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அலட்சியமே இந்த ஆபத்தான நிலைக்கு காரணமாக உள்ளது என கூறி மக்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே, குளத்தின் நீரில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அரசு ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டதில், மூளையை தின்னும் அமீபா எச்சங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

உடல்நிலை மோசமடைந்த மூன்று குழந்தைகளும் தற்போது திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இந்த சூழ்நிலையை அடுத்து, கோயில் குளத்தை பொதுமக்கள் அணுகவேண்டாம் என சுற்றுச்சுவர் மற்றும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. கயிறுகள் கட்டி மக்கள் செல்லாதவாறு தற்காலிக தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.