
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஆத்துமேடு பகுதியில் பேட்டரிக் சிலுவை முத்து என்ற 19 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அந்த சிறுமியும் வாலிபரை காதலித்ததாக கூறப்படும் நிலையில் இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.
இதனால் அவர்கள் காதலை கைவிடும்படி சிறுமியிடம் கூறியுள்ளனர். பெற்றோர் கண்டித்ததால் சிறுமி வாலிபரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளில் சிலுவை முத்து சிறுமியின் வீட்டிற்கு சென்று தன்னை காதலிக்குமாறு அவரை வற்புறுத்தினார்.
ஆனால் அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்ததால் கோபத்தில் தான் வைத்திருந்த பிளேடால் அவரின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் வழக்கு பதிவு செய்து சிலுவை முத்துவை கைது செய்தனர். தற்போது சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் பட்டப் பகலில் சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்து ஒரு வாலிபர் காதலிக்க மறுத்ததால் கழுத்தை அறுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.