மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நாஷிக்கில் உள்ள பாங்கரி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு 19 வயது இளம் பெண்ணும் வாலிபரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில் அந்த பெண் தன் கணவரை விட்டு தன் தாயுடன் வசித்து வருகிறார். இதனால் கோபம் அடைந்த அந்த கணவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை கடந்த திட்டமிட்டார். இந்நிலையில் சம்பவ நாளில் அவரின் மனைவி தன் தாயுடன் பாங்கரி பகுதியில் சாலை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் தன் நண்பர்களுடன் வந்த கணவர் தன் மனைவியை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்றார்.

இதனை தடுக்க முயன்ற மாமியாரை அவர்கள் அடித்து கீழே தள்ளி தாக்கினர். தன் மகளைக் காக்க அந்த தாய் எவ்வளவு போராடிய போதிலும் மனசாட்சியே இல்லாமல் அவரை அடித்து கீழே தள்ளிவிட்டு அந்த பெண்ணை கடத்தி சென்று விட்டனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணை போலீசார் பத்திரமாக மீட்டனர். அந்தப் பெண்ணின் கணவன் மற்றும் அவருடைய நண்பர்கள் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது கணவனை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றும் மூன்று பேரை போலீசார் தேடி வருகிறார்கள்‌. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.