நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யவில்லை. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டிய நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று தொடங்கியது. கடந்த காலங்களில் அனைத்து பட்ஜெட்டையும் பாஜக தனி பெரும்பான்மை பலத்துடன் தாக்கல் செய்த நிலையில் முதல் முறையாக பாஜக தலைமையிலான கூட்டணி அரசு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 7-வது முறையாக பட்ஜெட்டை  தாக்கல் செய்து வருகிறார்.

தனிநபர் வருமான வரி தாக்கலுக்கான நிலையான வரி கழிப்பு 50000 இருந்து 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். புதிய வருமான வரிமுறையில் மூன்று லட்சம் ரூபாய் வரையில் வரி இல்லை, மூன்று லட்சத்திலிருந்து 7 லட்சம் வரை 5% மற்றும் 7 லட்சத்திலிருந்து 10 லட்சம் ரூபாய் வரை 10%, பத்து லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரை 15 சதவீதம், 12 லட்சம் முதல் 15 லட்சம் வரை 20% வரி என அறிவித்துள்ளார்.