
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வசந்தா நகரை சேர்ந்தவர் ஜோஸ்வா சாம்ராஜ்(29). இவர் தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்துக் கொண்டு சேலம் தனியார் மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் பாடப்பிரிவில் மேற்படிப்பு படித்து வந்துள்ளார். சமீப காலமாக ஜோஸ்வா ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையானதாக தெரிகிறது.
இதனால் படிப்புக்கு பணம் தேவைப்படுகிறது என கூறி வீட்டிலிருந்து 7 லட்ச ரூபாய் பணத்தை வாங்கி ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்துவிட்டார். இதனை பெற்றோரும் உறவினர்களும் தட்டி கேட்டதால் மன உளைச்சலில் இருந்த ஜோஸ்வா கடந்த 2- ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரம் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போனார்.
இதுகுறித்து ஜோஸ்வாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை தேடி வந்தனர். நேற்று கொடைக்கானல் போலீசார் பூம்பாறை மலை கிராமத்திற்கு செல்லும் சாலையில் ஒரு கார் நிற்பதாக தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு சென்று பார்த்த போது ஜோஸ்வா தனக்குத்தானே ட்ரிப்ஸ் மூலம் விஷ மருந்துகளை செலுத்திக்கொண்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. போலீசார் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.