மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக்கில் சுரேஷ் போக் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே குலாப் ராமச்சந்திரா வக்மரே என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்களது குடும்பத்தினரிடையே நீண்ட காலமாக தகராறு இருந்துள்ளது. கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அடுத்த நாள் சுரேஷின் மகள் வீட்டை விட்டு ஓடி செல்வதற்கு குலாப் உதவி செய்ததாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த சுரேஷ் தனது மகனுடன் இணைந்து பக்கத்து வீட்டுக்காரரான குலாப்பை அரிவாள் மற்றும் கோடாரியால் வெட்டி கொலை செய்துள்ளார். அதன் பிறகு குலாப்பின் தலையுடன் தந்தை, மகன் இருவரும் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த குலாப்பின் உறவினர்கள் சுரேஷின் வீட்டை சேதப்படுத்தி, அவர்களது காரை எரித்தனர். இதனால் அந்த கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது.