பாமக நிறுவனர் ராமதாஸ் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருவதால் தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அன்புமணி ராமதாஸ் தைலாபுரத்தில் ராமதாஸை சந்தித்து பேசினார். அதன் பிறகும் இருவருக்கும் இடையான மனக்கசப்பு முடிவுக்கு வரவில்லை.

இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் என் மூச்சுக்காற்று நிற்கும் வரை தலைவர் பதவியில் நான்தான் இருப்பேன். 2026 தேர்தலுக்குப் பிறகு தலைவர் பதவியை அன்புமணியிடம் கொடுத்து விடலாம் என நினைத்தேன்.

ஆனால் அன்புமணியின் செயல்பாடுகளை பார்க்கும்போது மூச்சு உள்ளவரை நான் தான் தலைவராக இருக்க வேண்டும் என முடிவு செய்து விட்டேன். என் குடும்பத்தை சார்ந்தவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என கட்சி ஆரம்பிக்கும் போது கூறினேன். அதனை காப்பாற்ற முடியவில்லை. கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியதின் பேரில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதவி அன்புமணிக்கு வழங்கப்பட்டது.

மாநாட்டுக்கு பிறகு அன்புமணியின் செயல்பாடுகள் முற்றிலும் மாறிவிட்டது. நீங்க 100 வருஷம் நல்லா இருப்பீங்கன்னு சொல்லிட்டு இப்போது ஈட்டியால் மார்பில் குத்துகிறார். என்னால இரவு தூங்க முடியவில்லை. தூக்கம் வரவில்லை. ரொம்ப வேதனையா இருக்கு என கூறியுள்ளார்.