இமாச்சலப் பிரதேசம், சிம்லாவில் நடந்த அதிர்ச்சியான ஒரு சம்பவம் குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதாவது சண்டிகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி, தனது வளர்ப்பு தந்தையாகக் கூறப்படும் மருத்துவரால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், சிறுமி கம்பு போன்ற பொருளால் அடிக்கப்படுவதும், அவளது அலறலும், பயத்தால் நடுங்குவதும் தெளிவாக தெரிகிறது.

இந்த தாக்குதல் ஜூன் 14-ம் தேதி சிம்லா பகுதியில் நடைபெற்றது. அந்த வீட்டில் உள்ள ஜன்னல் வழியாக இந்தக் காட்சிகளைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர், சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்து, குழந்தை பாதுகாப்பு உதவிக் குழுவிற்கு தகவல் அளித்துள்ளார். அந்த வீடியோவில், சிறுமி மூலைகளில் ஒளிந்து கொள்ள முயல்கிறார். ஆனால்  வளர்ப்பு தந்தை தொடர்ந்து தாக்கியதால் , அவர் பாதுகாப்பாக இருக்க முடியவில்லை. இந்த நேரத்தில் அறையில் இருந்த அவரது வளர்ப்பு தாயாகக் கூறப்படும் பெண், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குழந்தைகள் நல ஆணையம் மற்றும் சண்டிகர் போலீசார் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். சிறுமியின் பாதுகாப்பு முன்னிட்டுத் தற்காலிகமாக அவரது பராமரிப்பை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. வளர்ப்பு தந்தை மீது கடுமையான குற்றச்சாட்டு வைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும், சிறுமி மூன்று வயதில் தத்தெடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவம், குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் இந்த வீடியோவை பார்த்து கோபத்தையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட மருத்துவ தம்பதியினர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.