மதுரை மாவட்டம் மேலமடை சந்திப்பு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் வடமாநிலத்தை சேர்ந்த பல தொழிலாளர்கள் இரவு, பகலாகப் பணியாற்றி வருகின்றனர்.

இப்பணியில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி துலுக்கன்குளத்தைச் சேர்ந்த கருப்பசாமி (28) இன்ஜினியராக வேலை பார்த்துவந்தார். நேற்று காலையில் வழக்கம்போல் பணிக்கு வந்த அவர், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ரோடுரோலர் வாகனத்தின் கீழ்பகுதியில் நிழலை நாடி அமர்ந்திருந்தார்.

அந்த நேரத்தில், திருமண மண்டபத்தில் பாடல்கள் அதிக சத்தத்துடன் ஒலித்ததால், அருகில் இருந்த ரோடுரோலர் ஆபரேட்டர் ரகுமான் (அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்) வாகனத்தை இயக்க, கீழே இருந்த கருப்பசாமி ரோடுரோலர் சக்கரத்தில் சிக்கி, அவரது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சத்தம் காரணமாக அவரது கூச்சல் எவருக்கும் கேட்கவில்லை என கூறப்படுகிறது. இதனை பார்த்த தொழிலாளர்கள் கூச்சலிட்ட நிலையில், ஆபரேட்டர் ரகுமான் ரோலரை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார்.

தகவலறிந்த மாட்டுத்தாவணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கருப்பசாமியின் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். பின்னர் தப்பிச் சென்ற ஆபரேட்டர் ரகுமான், போலீசில் சரணடைந்தார்.  இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.